இதயவான் ஆலயத்தினுள் வாழ்வோம்.

324

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

(12)

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.

 

இதயவான் ஆலயத்தினுள் வாழ்வோம்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

தபஸ்விகளின் சாபவிமோசனம் கண்ட அஞ்சநேயர் அவர்களின் தவவலிமையை எண்ணி, எண்ணி ஆச்சரியம் உற்றார். தவ வலிமையைத் தானும் பெற்றிட உறுதி பூண்டார். தனது தாயார் அஞ்சனா தேவியிடம் தவவலிமை பெறும் மார்க்கம் பற்றிக் கேட்டறிந்தார். அவரது அன்னை தாம் அறிந்த விதத்தை உபதேசித்தார். “மகனே, தவம் செய்பவர்களுக்கு அவர்கள் அன்பு உண்மை வடிவினதாக இருக்க வேண்டும். அன்பின் எண்ணங்களோ உண்மை மயமானதாகவே இருக்கும். இதுவே பெரும் பொருள் என்று அழைக்கப் படுகிறது. இது ஆத்மா என்றும் அறிவான் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வுலகில், தீமை, பசி, தாகம், துன்பம், முதுமை, மரணம் இவைகளுக்கு அப்பால் இலங்கும் தூய்மை மிக்க பரம்பொருளாய் நமது உள்ளத்தில் விளங்கிக் கொண்டே உள்ளது. இதனை அறிந்துணர்ந்து தெளிந்தவர்கள், அதனுள் தனது அன்பை, மகிழ்ச்சியை, ஐக்கிய நிலையை, மற்றும் இன்பத்தையும் காண்கிறார்கள். அத்துடன் தன்னைத்தான் கட்டித் தன்னுள்ளேயே தலைவனாய் விளங்கிடும் பேறுகளை அடைகின்றார்கள். மகனே தன்னுள்ளே தலைவனை அறிந்து கொண்டவர்கள் அகில லோகங்களிலும், அண்ட சராசரங்களிலும் எல்லையற்ற விடுதலைப் பேற்றினை அடைந்து என்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் ” எனக்கூறி விட்டு தனது மகனின் முகத்தில் ஏற்பட்ட ஆச்சரியத்தை அன்புடன் நோக்கினாள். மேலும் சில உண்மைகளை எடுத்து இயம்பினாள்.

 

” மகனே, இதயவானினுள் உள்ளே பிரம்மாபுரம் என்ற கோட்டை ஒன்று உண்டு. அந்த பிரம்மாபுரக் கோட்டையினுள்  தாமரை வடிவம் போன்றதோர் பொன்மயமான ஆலயம் துலங்குகின்றது. அவ்வாலயத்தினுள் தான் பிரம்மாபுரம் மேவிய பெம்மான்  வீற்றிருந்து அருள்பாலிக்கின்றார். அங்குதான் சகல பிரபஞ்சங்களும் அடங்கிய வெட்ட வெளியானது அவருள் அடங்கியுள்ளது. சகல கோள்களும், பஞ்ச பூதங்களும், நட்சத்திரங்கள், நாம் அறிந்தவைகள் மற்றும் நாம் அறியாதவைகள் அனைத்தும் அவரிடத்தில் இருந்துதான் தோன்றம் பெறுகின்றன. ஆத்மாவாகிய இறைவன் நமது இதயத்தினுள் குடி கொண்டு விளங்குகிறார். மகனே இந்த ஆத்மாவிற்கு உண்மையே வடிவமான அன்பின் எல்லா குணங்களும், உண்மை மயமாகத் திகழும் அனைத்து எண்ணங்களும் கீழ்ப்படிந்து கொள்கின்றன. மட்டுமல்லாது கடந்தகால ஜென்ம வினைப் பயன்கள் அனைத்தும் நீங்கித் தூய்மை பெறுகின்றன. அன்பும், உண்மையும்  ஒன்றே என்பதில், அன்பைக் காணாமல், உண்மையை அறிந்து உணராமல், இந்த உலகத்தை விட்டுச் செல்பவர்கள், பிரபஞ்சத்தில் உள்ள மற்ற உலகங்களிலும் தங்களுடைய விடுதலையை அவர்கள் அடைவதில்லை. ஆனால் மகனே, அன்பென்னும் உண்மை நிலையை உணர்ந்தவர்களுக்கு, தனது ஆத்மாண்டவனைக் கண்டவர்களுக்கு, இந்த உலகத்திலும், இனி வருகின்ற மற்ற உலகங்களிலும் இறையருளால் என்றும், எப்போதும் ஆத்மவிடுதலை கிடைக்கும் ” என அஞ்சனாதேவி அருளினார்கள்.

 

ஆஞ்சநேயர் தனது தாயாரிடம், “அம்மா இந்த உலகத்தில் நடப்பவை அனைத்தும் காலத்தின் நடைகள் என்கிறார்களே!  இவைகளைத் தெளிந்து ஆத்மாவை அடைவதுதான் இறுதியானதா? என அறிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன் அன்னையே! விளங்கச் சொல்லுங்கள் ” என்று  கேட்டார். மகிழ்ச்சியுற்ற அவரது தாய், “கூறுகிறேன் கவனமாகக் கேட்பாய். இந்த உலகத்தில்  உள்ளவர்கள் காண்பவை அனைத்தும் காலத்தின் போக்கில் மாற்றம் அடைந்து வருவதால், இதனை அநித்தியம் என்றார்கள். அப்படி என்றால் நித்தியமான வஸ்த்து ஒன்று நிச்சயமாக இருக்கும் அல்லவா? அவர்தான் பரிசுத்தமாய் விளங்கும் இறைவனாகும். அவரிடத்தில் தான் சகல பிரபஞ்ச சக்திகளும் இயங்கிக் கொண்டு உள்ளன.இப்பூவுலகில் அநித்தியமாக வாழும் வாழ்க்கையில் ஜீவர்களைக் காக்கும் பொருட்டே, அவர்களுள் ஆத்மன் என்ற சிறு ஒளியாகத் தோன்றி அனைத்து செயல்களையும் கண்காணித்துக் கொண்டு இருக்கின்றார். அநித்தியமான காலத்தில் இருந்து, நித்தியமான இறை ஐக்கிய நிலையில் வாழ்வாங்கு வாழச் செய்திடவே ஒரு இணைப்புப் பாலமாக ஆத்மாவாக மிளிர்கின்றார். இரவு, பகல் இரண்டைத்தவிர வேறொன்றும் அவரை  அணுக முடிந்திடாது. இந்த உலகத்தில் காணப்படுகின்ற எவ்விதத் துன்பங்களும் ஆத்மா எனும் பரம்பொருள் பாலத்தைக் கடந்து செல்ல இயலாது என்பதை அறிந்தவர்கள், ஒளி அல்லது இருளைக் கொண்டு தவம் புரிந்து, ஆத்ம அருள் பெற்றுக் கடந்து நித்தியமான இறைவனை நாடிச் சென்றார்கள். அவர்களுக்கு இறைவன் இருளையும் அறிவின் ஒளியாக மாற்றி விடுகின்றார். தவத்தில் எண்ணிய நாட்டம் பூர்த்தியாகத் தனது சொந்த ஆத்மாவை அறிந்துணர்ந்து தெளிந்து, கண்டு கொள்பவர், பிரபஞ்ச உண்மையில் வாழ்கின்றனர்.”

 

(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

 

அருளாசிகள்,

தவத்திரு ஶ்ரீ நாகராஜன் சுவாமி,

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button