அஞ்சனா தேவியின் அருந்தவம்

576

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

(6)

நாகவனம் பள்ளி கொண்ட ஶ்ரீ செல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தல வரலாறு.

 

அஞ்சனா  தேவியின் அருந்தவம்

௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦௦

பரம பக்தனாக விளங்கி ஈஸ்வரனையே வழிபட்டு வந்தவர்  கேசரி என்ற பெயர் படைத்தொரு உத்தமர். வம்சம் தழைத்திட தனக்கொரு புத்திர பாக்கியம் வேண்டி சர்வேஸ்வரனை நோக்கி கடுமை மிகுந்த தவத்தினை மேற்கொண்டார். தவத்திற்கு இரங்கிய பரம்பொருள் அவருக்கு காட்சி தந்தவுடன், புத்திர பாக்கியம் வேண்டி நின்றார்.  “பராக்கிரமசாலியாகவும், எவராலும் வெல்ல இயலாதவனாகவும், மரணமே அற்ற சிரஞ்சீவியாக வாழும் தவமிகு புத்திரனைத் தந்தருள வேண்டும்  இறைவா” என்று கேட்டார். அதற்கு இறையனார், “பக்தனே கேசரி இந்த ஜன்மத்தில் உனக்கு புத்திர பாக்கியம் கிடையாது என விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் உனது மேன்மை மிகுந்த தவத்திற்கு உரிய பலனைத் தந்துதான் உதவ வேண்டும். ஒரு பெண்மகவு  உனக்கு மகளாகப் பிறக்க அனுக்கிரகம் செய்கிறேன். உனது மகளின் வயிற்றில் உதிக்கும் ஆண் குழந்தை நீ  கேட்டுக் கெண்டபடி  எல்லா விதமான ஆற்றல் சக்திகளையும் பெற்று மரணமில்லாப் பெருவாழ்வில் வாழ்வாங்கு வாழ்வான் ” என்று அன்புடன் அருளினார். அதன்படி  சிவ பக்தன் கேசரியின் மனைவி உரிய காலத்தில் தெய்வாம்சம் கொண்ட , ஈஸ்வரன் அருள் பெற்ற பெண்மகவை ஈன்றெடுத்தாள். பெற்றோர்  இறையருள் பிரசாதம் எண்றெண்ணிக் குழந்தைக்கு அஞ்சனை  என்று பெயரிட்டுச் சீராட்டிப் பாராட்டி வளர்த்து வந்தனர். இந்த அஞ்சனா தேவி தான் பார் போற்றும்  உத்தமரான ஆஞ்சநேயரை, மகாதேவரின் அம்சமான மாருதியை உலகினுக்குத் தந்து பேரும் புகழும் பெறப் போகின்றவள்.

 

அஞ்சனைக்கு இயல்பிலேயே இயற்கை வளங்களைக் கண்டு மகிழ்வதில் பெரு விருப்பம் இருந்தது. குழந்தைப் பருவம் முதல் வனங்களில் சுற்றி மகிழ்ந்த அவள், பருவவயதிலும் அப்படியே தனதிஷ்டப்படி வனத்திலேயே வாழ்ந்து வரலானாள். வனத்தில் அவள் கம்பீரமான தோற்றமும், அழகும் உடைய வானர இளைஞனை சந்திக்க  நேர்ந்தது. மனதினைப் பறி கொடுத்த அவள் தனது பெற்றோரின் ஆசியுடன் அவனையே திருமணமும் செய்து கொண்டாள். பல ஆண்டுகள் கடந்தும் அவளுக்கு குழந்தை பாக்கியம் மட்டும் ஏற்படாததால் துயரம் மிக உற்றாள்.  பிறகு அதற்கான தர்மதேவதையின் நோன்பினையும் முறைப்படி நோற்று  இறைவனை இறைஞ்சி வரலானாள். தர்ம தேவதை பெண் வடிவம் கொண்டு அஞ்சனா தேவியைச் சந்தித்து, ஆறுதலும் , தேறுதலும் சொல்லி மனக்கவலையை மாற்றி, அவளுக்குப் பார்புகழும் மைந்தன் உறுதியாகப் பிறப்பான் என ஆசிகள் அருளியது. அத்துடன் திரு வேங்கடமலை மீது வீற்றிருக்கும் பெருமாளை பூஜித்து, ஆகாய கங்கை தீர்த்தத்தில் நீராடி தவமியற்ற வேண்டும். திரு வேங்டம் உடையான் அருளால் உனக்கு எல்லாமே நன்மையாக நடந்து வரும் ” என  அன்புடன்  கூறிவிட்டுச் சென்றது.

 

மனநிம்மதியைப் பெற்ற அஞ்சனாதேவி தான் தவம் செய்ய, திரு வேங்கட மலைக்கு சென்று வர உத்தேசித்து இருப்பதாகக் கணவனிடத்திலும், தனது பெற்றோரிடமும்  பணிவுடன் தெரிவித்துக் கொண்டாள். அதன் காரணத்தை அறிந்து கொண்ட அவர்கள் அவளது மனோ தைரியத்தைப் பாராட்டி ஆசியருளி வழியனுப்பி வைத்தனர். அக்காலத்தில் பெண்கள், ஆண்களைப் போலவே, சுதந்திரமும், தைரியமும், துணிச்சலும் மிக்கவர்களாக இருந்திருக்க வேண்டும் என்ற கருத்து அஞ்சனையின் வரலாற்றிலிருந்து அறிய முடிகிறது. திரு வேங்கடமலைக்குச் சென்ற

அஞ்சனாதேவி வேங்கடேஸ்வரரை வழிபட்டு விட்டு, தவம் புரிய ஆகாயகங்கை

ஸ்தலம் சென்றடைந்தாள். பேரெழில் சூழ்ந்த ரம்யமான வனத்தில், புத்திர பாக்கியம் வேண்டி நியமங்களுடன் அவள் தவம் புரியத்துவங்கினாள். தவம் நாளுக்கு நாள் உக்கிரமாக மாறியது. உணவு உட்கொள்வதை நிறுத்தி விட்டாள். தனது இரு கரங்களை ஏந்தியபடியே தவமிருக்கும் அவளின் நிலைகண்டு, பஞ்சபூதங்களும் இயற்கையின் நியதியில் உதவிகள் புரியத்துவங்கி விட்டன. சுவாசத்தில் சதா ஓடிக்கொண்டிருக்கும் காற்றானது அஞ்சனைக்குக் கட்டுப்பட்டு சேவைகள் புரியத்துவங்கி விட்டது. அன்ன ஆகாரமின்றி வெறும் காற்றையே பிராணாயாமத்தில் உட்கொண்டு, முறையாக தவம் செய்த அஞ்சனா தேவியின் தவக்கனலின் ஜூவாலை, தேவாதி தேவர்களைத் தகித்தது. அதனால் மனம் கழிவிரக்கம் கொண்ட வாயு பகவான், கைகளை விரித்து ஏந்தியபடியே தவமிருக்கும் அவள் தவத்திற்கு மெச்சி, தினமும் ஏதாவது ஒரு கனியை அஞ்சனை வைத்து விட்டு செல்வதை வழக்கமாக்கிக் கொண்டான்.

 

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

 

(குரு ஈஸ்வராலயம் பரிகார ஸ்தல வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

அருளாசிகள்,

தவத்திரு ஸ்ரீ நாகராஜன் சுவாமி,

நாகவனம் பள்ளி கொண்ட ஶெசல்வ ஆஞ்சநேயர் பரிகார ஸ்தலம்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button