வேதாள சாபநீக்கமும், “வேதாள்பட்” உருவான விதமும்!

379

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம், குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

மனிதனே புனிதன் பாகம் – 2

 

(17) வேதாள சாபநீக்கமும், “வேதாள்பட்” உருவான விதமும்!

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

சிறிது காலத்திற்கு முன்பு இரண்டாவது தலைநகரம் அமைப்பதற்குப் மதியூகி பட்டியை இடம் தேர்வு செய்ய மன்னன் அனுப்பியிருந்தார். அப்போது அவர் வசனகிரி என்ற மலைப்பகுதியில் இருந்து ஓடிவரும் குணவதி என்னும் நதிக்கரை ஓரம் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த அற்புதமான ஓர் இடத்தைக் கண்டார். அங்குள்ள மூலிகை வனத்தினுள் அதிசயக்கத்தக்க அநேக பொய்கைகளும் சூழ்ந்திருக்க, மிகப்பெரிய ஆலமரமும், மேடையும், மேடையின் மீது ஒர் சம்பவத்தைக் குறிப்பிடும் வாசகங்களும்  பொறிக்கப்பட்டிருந்தது. மதியூகிபட்டி அதன் வாசகங்களைப் படித்துப் பார்த்துக் கொண்டு இருந்த போது வேதாளமகரிஷி அங்கு தோன்றினார். மதியூகிபட்டி அவரை நமஸ்கரிக்கவும் ஆசிகூறிய அவர் அங்கு தான் வசித்து வரும் மலைக்குகைக்கு அழைத்துப் போனார். மதியூகி மன்னனின் சகோதரன் என்பதை அறிந்து கொண்டு தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார் மகரிஷி. தன்னை ஒரு சாபத்திலிருந்து விக்கிரமாதித்திய மன்னன் காப்பாற்றப் போவதாகவும், அதனால் வாழ்நாள் முழுவதும் அவருக்கு உதவப்போவதாகவும் கூற மதியூகிபட்டி பெருமகிழ்ச்சி கொண்டார்., தனது வரலாற்றை வேதாள மகரிஷி அவருக்கு வெளிப்படுத்தினார். பின்னாளில் இதனை விக்கிரமாதித்திய மன்னனுக்கும் தெரியப்படுத்தினார்l

 

மதியூகிக்கு வேதாளமகரிஷி கூறிய சுயசரிதம் அக்காலத்தில் தெய்வீகம் என்பது எந்த அளவிற்கு மனிதனோடு தெடர்பு கொண்டு இருந்துள்ளது என்பதை நம்மால் விளங்கிக் கொள்ள முடிகின்றது.  அத்தகைய ஒன்றுதான் ஸ்தானிகரான நாகராஜேஸ்வரபட் சாபமும், வேதாள்பட் விமோசனமும்! அதனை வேதாளமகரிஷி வாய்மொழியால் கேட்போம். “கேளும் மதியூகிபட்டி அவர்களே! முன்பொரு ஜென்மத்தில் புகழ்மிகு ஜவ்வந்தி நாதேஸ்வரர் அருள்மாரி பொழிந்ததால் சீரும் சிறப்பும் செல்வவளமும் பெற்ற சோழவளநாட்டிலே, பரமேஸ்வரர் ஆலய  ஸ்தானிகராக பூஜை, புனஸ்காரம், நெய் வேத்தியமுடன் ஆறுகால வழிபாடுகள் நியதி மாறாமல் செய்து வந்தேன். அப்படி முறையாக நடைபெற்று வந்ததால் அங்கு பகவான் திருவுள்ளத்தால் ஈஸ்வரனும், ஈஸ்வரியும் உரையாடும் குரலை  எம்மால் கேட்கும் பாக்கியமும் பெற்றேன். உண்மை மிகுந்த பக்தனாக இருந்ததால் இது அவனருளால் வாய்த்தது. ஈஸ்வரிக்கு சர்வேஸ்வரன் உபதேசம் செய்து வந்ததில், மருத்துவம், மனோதத்துவம், நீதியாகிய ஒளிதீபம், விடைகாணாப் புதிர்கள், வானூர்தி ரகசியங்கள் என எனதறிவிற்கு விளங்கும் வண்ணமாக உபதேசித்துக் கொண்டிருப்பதில் அநேக உண்மைகளைக் கற்றுணர்ந்து  கொண்டேன். ஒரு நாள் இருபத்தி நான்கு விடை காணாப் புதிர்களுக்கு விடையும், நீதியும் சொல்லிக் கொண்டே வந்தவர், இருபத்தி நான்காவது புதிருக்கு விடை சொல்லாமல் நிறுத்திக் கொண்டு, தேவி இதனை யாரிடமும் கூறக்கூடாது எனக்கூறியதும் மௌனமாகி விட்டார்.”

 

” நேரம் நடுநிசியைத் தாண்டி விட்டதால் அடியேன் நெய் வேத்தியத்தியத்தை எடுத்துக் கொண்டு வீடு திரும்பினேன். இறைவனது சோதனை அன்று அடியேன் மீதுள்ளதை அறிய இயலாது யோசனையுடன் சென்று கொண்டு இருந்தேன். தினமும் காலதாமதமாக வீட்டிற்கு வருவதால் எனது நடத்தையில் சந்தேகம் உற்ற மனையாள் ஊடல் கொண்டு எமது உள்ளத்தில் வேதனையை உருவாக்க முயற்சித்து தன்னை வஞ்சிப்பதாகக் குற்றம் சுமத்தினாள். எனது புனிதத்தை சந்தேகித்த அவளுக்கு உண்மையைக் கூறவேண்டிய  கட்டாயத்திற்கு ஆளாகிப் போனேன். சிவசக்தி சம்பாஷனையை, அவர்கள் பேசிக் கொள்வதைத் தயங்கித் தயங்கிக் கூறிவிட்டேன். அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்? எனக் கேட்டதும்,அவளது ஊடலைத் தணிக்க இருபத்தி நான்கு புதிர் கதைகளைக் கூறினேன். அவைகளை ஆர்வமுடன் கேட்ட அவள் எனது வாக்கை மீறிப் புதிர்கதைகளை ஊர் முழுக்கப் பரப்பி விட்டாள். சிவம் உடனே தோன்றி அடியேனை தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கும் வேதாளமாக மாறும்படி சபித்து விட்டார். பகவான் திருவடி பணிந்து

சாபவிமோசனம் அருளும்படி வேண்டித் தொழுதேன். பக்தரக்ஷ்கன் பகவான் விக்கிரமாதித்ய மன்னனை ஆயிரமாவது நரபலி கொடுத்து அஷ்டமாசித்திகளைப் பெற்று, உன்னையும் அடிமை கொள்ள ஒரு கொடியவன் முயலுவான். அறிவுசால் மன்னனுக்கு உதவி செய்யும் போது உனது சாபம் அகன்று வேதாளமகரிஷியாக உருவெடுத்து எம்மைக் குறித்து தவம் செய்தால், தேவிக்கு யாம்கூற நீ கேட்ட பாடங்கள் அனைத்தும் கிடைக்கப் பெறுவாய். வேதாளஉடல் வானூர்தியாக உனக்கு உதவும். மன்னனுக்கு “நீதி ஒளிதீபம்” உபதேசித்து அவனது சபையில் “வேதாள்பட்” என்ற குருவாக மன்னனுக்கு நல்லாட்சி புரிய உதவி நீடு வாழ்வாய் என அன்புடன் ஆசியருளினார். பகவத் கிருபையே கிருபை” என நமஸ்கரித்தார்.

 

(மனிதனே புனிதன் வரலாறு பாகம் – 2 இன்னும் தொடர்ந்து வரும்)

 

வளம் பெருக! அருள் பெறுவோம்!

நன்றி, வணக்கம்!

ஶ்ரீ ஈஸ்வர குமரரின் தொண்டன்

மதுரை M.மேகநாதன்,

குரு ஈஸ்வராலயம் அறக்கட்டளை®,

பொள்ளாச்சி.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button