மனிதனே புனிதன் வரலாறு பாகம் – 2 வாழ்த்துரை

401

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஶ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

 

வணக்கம் குரு ஈஸ்வராலயம் மெய்யன்பர்களே!

 

மனிதனே புனிதன் வரலாறு பாகம் 2 வாழ்த்துரை.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் அனைவருமே ஏதோ ஒரு வகையில், எதற்காகவோ உழைத்துக் கொண்டே இருப்பதாக அடிக்கடி எண்ணி வந்திருக்கிறேன். இதன் காரணம் என்ன? என்ற கேள்விக்கு விடையைத் தேடியபோது அந்த சமயத்தில் எனக்கு ஒருவருடைய நட்பு கிடைக்கப் பெற்றேன். அவர்தான் நமது தவத்திரு நாகராஜன் சுவாமி. ஆரம்ப காலத்தில் தற்போது நாம் காணுகின்ற சீருடைகள்  எதுவுமின்றி,  மிகவும் சாதாரணமாக, ஒரு பழுப்பேறிப்போன பச்சை வண்ண  அரைக்கை சட்டை, தினமும் துவைத்து உடுத்திக் கொள்ளும் மெல்லிய கரையிட்ட ஒரு வேட்டி இப்படித் தான் அவரைக் கண்டிருக்கிறேன். அன்பு ஒன்றே அவரது தாரக மந்திரம். அவரிடம் மேற்குறிப்பிட்ட வினாவினைக் கேட்டேன். “உலக மக்கள் உழைப்பு என்ற தெய்வீகக் கருத்தை நிறைவேற்றுவதில் ஒன்று கூடுகின்றார்கள். இதனைத்தான் உலக மக்களின் கூட்டுறவு என்று ஞானியர்கள் வரையறுத்திருக்கின்றார்கள்”  என்றார் சுவாமி. ” எனக்குப் புரியும்படியாகக் கூறுங்கள் ” என்று கேட்டுக் கொண்டேன். அதற்கு அவர், ” பாடுபட்டால்தான் உணவு கிடைக்கும்  என்ற நிலைமையில் பலர் அறிந்தே உழைக்கின்றார்கள். இன்னும் சிலர் தெய்வத் தொண்டு என நினைந்து, உழைப்பின் கருத்தை நிறைவேற்றுவதில் பாடுபடுகின்றனர்.  உலகத்தின் பொது உழைப்பு என்ற  உறக்கத்தில் ஆசை கொண்டு சோம்பிக்கிடப்பது்ம், அறியாமை காரணமாக பலர் போதையில் உணர்விழந்து கிடப்பதும், உலக வாழ்க்கையை எதிர்த்து வாழும் மக்களும், மற்றவர்களுக்கு இடையூறுகளைத் தந்து கொண்டே இருப்பவர்களும், உலகப் பொருட்களுக்கு நாசத்தை விளைவிப்பவர் என எப்படிப் பார்த்தாலும், அவரவர்கள் பாதையில் உலகத்தின் கூட்டுறவில் தங்கள் உழைப்பை, ஏதாவது ஒரு வழியில் வெளிக்காட்டி உலக நடைமுறைக்கு வேண்டப்பட்டவர்கள் ஆகின்றார்கள் ”  என்று கூறி எனது கண்களை உற்று நோக்கினார். 

 

“என்ன கூற வருகின்றீர்கள்? ” என அவசர கதியில் கேட்டுவிட்டேன்.  அதற்கு அவர் சிரித்தபடியே, ” இன்னும் கூறி முடிக்க வில்லை, அதனை அறிந்து கொள்ளாமல்  உழைக்கின்றீர்கள் ” என்று சுவாமி கூறிவிட்டு பலமாக சிரிக்க ஆரம்பிக்கவே, நான் வாய்பொத்தி மெளனமானேன். அதனைக் கண்டு சிரித்து விட்டு, “அமுதன்  இதில் என்ன சந்தேகம் இருக்க முடியும்? உலகை ஆட்சிசெய்யும் இறைவன், உலக நடைமுறைக்கு வேண்டியவர்களாகத் திகழும் உழைக்கும் மக்களனைவரையும், தனது கருவிகளாகப் பயன்படுத்திக் கொள்கின்றார். நீங்கள் இறைவனுக்கு  ஏதாவது ஒரு வகையில்,  கருவியாக மாற முயல வேண்டும். ஒன்று உலகை எதிர்த்து தொழில்படுவதால் ஏற்படும் தீமைகள். மற்றொன்று  உழைப்பை அறிந்து இறைசக்திக்கு உடன்பட்டு வாழ்வதால் உண்டாகும் நன்மைகள். தேர்ந்தெடுத்து வாழ்வது அவரவர் விருப்பம் என்பது இயற்கை மனிதனுக்குக் கொடுத்த சுதந்திரம் ” என சுவாமி கூறினார்.

 

குரு கடாட்சம் என்பது நம்பிக்கை உடைய பக்தர்களின் ஆத்ம மணியின் பிரகாசம் போன்றது. உடலுக்கு உயிராய் இருந்து காப்பது. மலர்களின் மணமாய் வெளிப்பட்டு தூய்மை தருவது. சகல பாவங்களில் இருந்தும் மீட்சி தந்து ரட்சிப்பது. வீடு பேறு அடையும் பொருட்டு சுத்த அறிவினில் வாழ வைப்பது. பிரபஞ்சத்தின் உண்மை எனும் மாயை சக்தியை உணர்த்தி ஆட்கொள்வது. இவைகள் அனைத்துமே அறிவின் பலவித அருளாட்சியை வெளிப்படுதிய இறை சக்தியின் ஆற்றல்கள் தான். இதனை நமது தவத்திரு நாகராஜா சுவாமி அவர்கள்  இறையருளின் மறக்கருணையைப் பற்றி தெளிவுபட விவரித்துக் கூறியுள்ளார். மனிதனே புனிதன் வரலாறு கூறும் பாடங்களில் இது விரவிக் கிடக்கின்றது. 

 

நன்றி, 

ஞானயோகி திரு ஆராவமுதன்,

பவானி.

 

 (இதன் தொடர்ச்சி இன்னும் வரும்)

 

 வாழ்கவே! வளர்கவே! வளம் பெருகவே! அருள் தருகவே!

 

ஓம் ஶ்ரீ சுவாமியே ஈஸ்வர குருநாதா சரணம்! ஓம் குருவே துணை!


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button