மனதில் சோர்வும், துன்பமும்.

735

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம். 

 

17•09•2017,

சனிக்கிழமை, 

குரு ஈஸ்வராலயம்,

பொள்ளாச்சி. 

 

(444) மனிதனே புனிதன் —

 மனதில் சோர்வும், துன்பமும்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°° தான் தங்கியிருக்கும் அறையில் தூய்மை அற்ற தன்மை காணப் பட்டதால், தன்னுடைய உள்ளத்  தூய்மையே பிரதானமாக சுவாமி எண்ணி வழக்கம் போல் தனது பிரார்த்தனையில் அமர்ந்து கொண்டார். முன்பு ஒருமுறை நமது சுவாமி அவர்கள் கிராம வீட்டில் இருக்கும் போது, வீடு தூய்மையற்றுக் காணப்படுகிறது  என்று  தனது துணைவியாரிடம்  கூறிவிட்டார். அவர்களுக்கோ அநேக வீட்டு வேலைகளைக் கவனிக்க வேண்டியிருந்தது. பிறகு வீட்டைத் தூய்மை செய்து விட்டு மற்ற உதவிகளையும் செய்து வந்தார். ஒரு வார்த்தை கூட எதிர்த்து பதில் கூறாமல் இருப்பதுதான் அவர்களின் சுபாவம். அன்று சற்குரு நாதர் ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி அவர்கள் கிராமத்திற்கு வந்திருந்தார். அரசமரத்து நிழலில் ஓய்வாகப் படுத்தபடி ஆழியாற்றில் நீர் வரத்து வருவதைப் பார்த்துக் கொண்டு இருந்தார். நமது சுவாமி நாகராஜன் அவர்களுக்கு தனது குருநாதர் வந்து விட்டால் காதுகளில் ஒருவித இனிய ஓசை கேட்கும். உடனே அவரை தரிசிக்க மனம் ஏக்கத்துடன் எதிர்பார்க்க ஆரம்பித்து விடும்.  அன்று அந்த அழைப்பின் ஓசை சற்று வேகமாகப் கேட்டது. வீட்டின் பின்புறத்தில் இருந்து “நாகராஜா” என்று கூப்பிடும் குரல் கேட்டது.

 

தாய் முகம் கண்ட சேயின்  நிலையில் சுவாமி இருந்தார். தனது துணைவியார் திருமதி மீனாம்பாள் நாச்சியார் அவர்களுக்கு வீட்டைத் தூய்மை  செய்யும் பணியில் உதவிக் கொண்டு இருந்தவர், அப்படியே பின்புறத்திற்கு ஓடிப் போனார். நமது சுவாமியைப் பார்த்து ஸ்ரீ சற்குரு நாதர், ” மகனே, வீடு சுத்தம் செய்கிறாயா? வா வா உனது சுவாமியின் வீடு மிகவும் அழுக்கடைந்து உள்ளது. சற்று வந்தாயானால் தூய்மைப்படுத்தி விடலாம். போவோமா? ” என்று கூறியதும் மெளனமாகப் பின் தொடர்ந்தார். முன்பு ஒருமுறை இதனைப்பற்றிக் குறிப்பிட்டு இருந்தாலும், சற்குரு நாதரின் வழிகாட்டுதல் இதில் முக்கியம் வாய்ந்ததாகக் கருதியதால் இதனைக் குறிப்பிடுகின்றேன். உலகமே தனது வீடு என்றும், தான் குறிப்பிடும் இடங்களை நீ தான் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.  சொன்னால் உடனே உதவிகள்  செய்வதற்கு உன்னை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?  என பீடிகை போட்டார். நமது சுவாமி அவர்கள்,  ஸ்ரீ ஈஸ்வர பட் சற்குரு நாதர் சுவாமி கூறிய பணிகள் அனைத்தையும் சங்கடப் படாமல் மனநிறைவோடு செய்தார். தெருக்குப்பைகள், மாட்டுச் சாணங்கள்  மற்றும் மனிதர்கள் மந்தையில் இருந்து வைத்த மலஜலங்களை ஒரு கூடையில் அள்ளினார். சற்குரு நாதரிடம் நமது சுவாமிகள் பணிந்து தயவுடன் ஒரு கேள்வி கேட்டார். ” சகல ஞானபண்டிதரே சற்குருநாத சுவாமிகளே, எமது வீட்டில் உள்ள குப்பை, கூளங்களைக் கொட்டுவதற்கு என்றே ஒரு  இடத்தை ஒதுக்கியுள்ளோம். ஆனால் எமது ஈஸ்வர தேவரீர்  உமது உலகமாகிய வீட்டில் இருக்கும் குப்பைகளைக் கொட்டுவதற்கு ஏற்ற ஓர் இடத்தைக் காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன் ” என்று கூறினார்.

 

உலகத்தில் நடைபெறும் எந்த நிகழ்ச்சிகளாயினும் அதனை மனிதர்கள் எவ்வாறு பயன்படுத்துகிறார்களோ, அதற்குத் தக்கபடியேதான் வாழ்க்கையில் நல்லதோ,  கெட்டதாகவோ உருவாகின்றது. நம்மைச் சுற்றிலும் நடைபெறும் நம்முடைய புற நிகழ்ச்சிகள் நம்முடைய  எண்ணத்தின் வலுப்பெற்று இருந்தால் நம்மை எதுவுமே செய்ய இயலாது. அவைகளை எப்படி வேண்டும் என்றாலும் செய்து கொண்டிடும் சக்தி ஆற்றல்கள் நமது உள்ளத்திற்கு எப்போதும் உண்டு என ஞானத்தின் வழி கூறுகிறது.  சற்குரு நாதர் அவர்கள் நமது சுவாமி கூறிய வார்த்தைகளைக் கேட்டுப் பலமாகத் தனது சிரசை ஆட்டிக் கொண்டார். குருவின் ஆணையை அப்படியே கடைப்பிடித்து வரும் உத்தம சீடனைக் கண்டு ஸ்ரீ ஈஸ்வர பட் சுவாமி மகிழ்வு மிகக்கொண்டார். ஆனாலும் அதனை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை. தனது சீடனுக்குச் சில போதனைகளை மறைமுகமாகவோ அல்லது வெளிப்படையாகவோ கூறுவது வழக்கம் தான். உண்மையில் சீடன் தனக்கு ஏதுமற்ற பல விஷயங்களில் மனதினைச் செலுத்தியும், கோப உணர்வைக் கொண்டு விட்டாலும் அதனை மாற்றி உண்மையான சேவை மனப்பான்மையை உணர வைக்கிறார். உலகோதயக் குப்பைகளை விலக்கி மனதுதூய்மை கொண்டு ஆன்மாவை அறிதலும்,  சேவையுமாம்.

 

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

 

நன்றி! வணக்கம்! 

 

—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்! 

மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button