போதிக்க நான் தயார், கற்க நீ தயாரா?

224

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

02•09•2017,
வெள்ளிக்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(429) மனிதனே புனிதன் —
போதிக்க நான் தயார், கற்க நீ தயாரா?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மனிதனுடைய உன்னத அனுபவம் என்பது அது இயற்கையின் இயல்பை ஒட்டி வாழ்தலே என்றனர் ஞானியர்கள். இதில் ஆன்ம வளர்ச்சிக்கும் பொருள் உள்ளது. மகான்கள் இறைசக்தியாகிய ஆன்மாவை வலிமையானதாகக் கருதினர். ஆன்மாவை விடவும் மிகவும் வலிமையானது இறைவன் மட்டுமே என்பதை உணர்ந்திருந்தனர். இறைவனிடத்தில் இருந்தே பிரபஞ்சமும் சகல ஜீவன்களின் ஆன்மாவும் சக்தி பெறுகின்றது. எல்லா ஜீவன்களிலும் ஆன்மா மறைந்தே உறைகின்றது. ஆனால் அது வெளிப்பட்டுக் காணப்படுவதில்லை. மனித மனமானது எந்த விஷயத்திலும் சலனப்பட்டுக் கொண்டே இருக்கிறது. அதனால் ஆன்மாவை அறிய இயலாது. புத்தியானது புற விஷயங்ளை மட்டுமே அறிந்து முடிவு செய்வதாகவும், அதனாலும் ஆன்மாவை அறிய இயலாது என்பதே முடிவு. ஏனெனில் ஆத்மா அகவிஷயத்தைப் பற்றியது. ஆன்மாவை அறிந்து கொள்ள நுண்மை வாய்ந்த அறிவால் மட்டுமே முடியும். அதுவே விழிப்புணர்வு. இளம் துறவியின் நிலையோ குழப்பம் சூழ்ந்ததாக இருந்தது. அவரால் நம்பவும் இயல வில்லை. நம்பாமல் இருக்கவும் முடிய வில்லை என்பதை அந்த இளந்துறவியின் முகம் எடுத்துக் காட்டியது. இளநகையுடன் அவரை உள்ளே அழைத்துச் சென்ற பெரியவரும் அன்புடன் உபசரித்து உண்ணப் பழங்கள் தந்தார். தயக்கத்துடன் உண்ட இளந்துறவி மெல்லப் பெரியவரிடம் பேச ஆரம்பித்தார்.

“என்னை முதலில் மன்னிக்க வேண்டும். உங்கள் பிரார்த்தனை எப்படி நடை பெறுகிறது என அறிந்து கொள்ளத்தான் இங்கு வந்து மறைந்திருந்தேன். மீண்டும் என்னை மன்னிக்கவும். தாங்கள் எப்படி மிதந்து, மறைந்து எங்கே சென்று, உடனே இங்கே வந்து சேர்ந்தீர்கள்? அது எப்படி சாத்தியம்? கூறுங்கள் ” என்று இளந்துறவி கேட்டார். அதற்குப் பெரியவர், ” மகனே சென்றவுடன் நான் திரும்பி வந்து விட்டதாக நீ கூறியது சரியல்ல. இன்றுடன் மூன்று நாட்கள் ஆகிவிட்டது” என்றார். இதனைக் கேட்டதும் இளந்துறவி அதிர்ந்து போனார். தன்னை மூன்று தினங்களாக அன்னஆகாரமின்றிதன்னை ஒரே இடத்தில் நிலையாக இருக்க வைக்க சாத்தியம் என்றால் … என யோசித்தவர், “அதனைப் பற்றி அறிந்து கொள்ள விரும்புகிறேன் ஐயா. எனக்கு ஆசானாக இருந்து போதிக்க வேண்டும் “என்று கேட்டார். அதற்குப் பெரியவர், “மகனே இது அகவாழ்வு பற்றிக் கூறப்படுவது. அகவிஷயங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. நான் உனக்கு இதனைப் போதிக்கத் தயார்தான். ஆனால் இந்த ரகசிய வித்தையைக் காப்பாற்றும் தகுதி உனக்கு இருக்கிறதா ? என்று தான் அறிந்து கொள்ள விரும்புகிறேன்” என்றார். தனது மாறுகண்களால் பெரியவரை முறைப்பது போல் பார்த்து இளந்துறவி, “உங்களை முழுமையாக நம்புகிறேன்” என்றதும் பெரியவர் மூன்று தினங்கள் ஆதாரமின்றி விழித்திருந்து பிரார்த்தனை செய்யக் கற்றுத் தந்தார். “அந்த மூன்று தினங்கள் என்ன நேர்ந்தாலும் பயங்கொள்ளாமல் இருக்க வேண்டும் ” என்று உரைத்தார். இரண்டு தினங்கள் தாக்குப்பிடித்த இளந்துறவி மூன்றாவது தினத்தில் நித்திரை சுகத்தில் ஆழ்ந்து போனார். பிறகு இதனைப் பற்றி நமது சுவாமியின் திண்டுக்கல் நண்பர் மற்றும் தனது உறவினர்களிடம் கூறிவிட்டார். யாருக்கும் இதனைப் பற்றிப் புரிந்துகொள்ள இயலாததால் இறந்துறவியைப் பைத்தியம் என எள்ளி நகையாடினர். சிலர் சந்தேகம் கொண்டு பெரியவரைத் தேடிச் சென்றனர். அவர் அன்றிலிருந்து யாருக்கும் தென்படவில்லை.
பெரியவரைக் காணாது மனம் நொந்து இளந்துறவி புலம்பினார். “அற்புதமான சக்தியைப் பொறுமையுடன் கற்றுக் கொள்ளாமல் ஏமாற்றம் அடைந்தேனே ” என ஏங்கிய அவர் மனம் வெறுத்து
திண்டுக்கல் மலை மீது ஏறிச் சென்று அங்கு அமர்ந்து கொண்டார். மாலை நேரத்தில் பெரியவர் திடீரென அவர் முன்னால் தோன்றினார். அவரைக் கண்டு வந்தனம் செய்து மன்னிப்பும் கேட்டுக் கொண்டார் இளம் துறவி.

பெரியவர் அவருக்கு ஆறுதல், தேறுதல் சொல்லி விட்டு, “மகனே பஞ்சபூதங்களாயினும், அறிவு விருத்தியற்ற ஜீவர்களாயினும் தனது இஷ்டத்திற்குத் தாம் நினைத்தவாறு செல்ல இயலாத நிலையில், இறையருள் சக்தியால் தடைகளாலும், இடையூறுடளாலும் அவைகள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. ஆனால் மனிதர்களுக்கு அப்படிக் கிடையாது. புத்தியினாலும், பகுத்தறிவைக் கொண்டும் எந்த இடையூறுகள் நேர்ந்தாலும் அதனைக் கடந்து சென்றிட முடியும். தடை களுக்கு இசைந்தபடி தனது செயலை வகுத்துக் கொள்ள மனிதனால் முடியும். இயல்பிலேயே மனிதனுக்கு அத்தகைய பகுத்தறியும் சக்தியின் ஆற்றலை இறையருள் சக்தி வழங்கியுள்ளது. நீ தியான சக்தியைத் தெரிந்து கொண்டு, முறையாகப் பயின்று, அதன் மூலம் உனது கருத்தை நிறைவேற்றிக் கொண்டிட ஆத்ம சக்திக்கும் பரிபூரண சுதந்திரம் உண்டு என்பதை மறந்து விடக்கூடாது.”

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button