ஏதாவது விமோசனம் உண்டா?

442

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம் ஹரி ஓம்.

12•09•2017,
திங்கட்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(439) மனிதனே புனிதன் —

ஏதாவது விமோசனம் உண்டா?
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
ஒரு மனிதன் துன்பங்கள் எதுவும் இல்லாத நிலையை அடைந்து விட வேண்டும் என்று எண்ணினால், வாழ்க்கையில் தனது கடமைகளைச் செய்து வருவதில், ஞானத்தோடு ஒன்றி விட்ட அறிவுடன் கூடி செயற்பட்டால் மட்டுமே, நடுவு நிலை தவறாதவனாய் வாழ முடியும். அத்தகைய மனிதன் எப்போதும் துன்பங்களற்ற நிலையை எய்து விடுகிறான். தன்னலம் மிகுந்த ஆசைகளைக் கொண்டவர்கள் தங்களது ஜெயம் அல்லது தோல்வியில் துவண்டு போகின்றார்கள். எந்தக் காரியம் செய்தாலும் மன அமைதியின்றி அலைகிறார்கள். மனம் ஒரே நிலையில் நின்று செயற்பட வேண்டுமானால் மனதின் சமமான நிலை எப்போதும் காக்கப்பட வேண்டும். அதனால் மட்டுமே மன அமைதி ஒரே நிலையில் இருக்கும். அடைகின்ற பேறுகளோ, அடைந்து விட்ட இழப்புக்களோ, வெற்றியோ, தோல்வியோ எதனையும் சமமாகக் கருதாமல் இருப்போர் மனமானது அவர்களது சொந்தப் பேராசையினால் வார்ப்படம் செய்யப்பட்டு இருக்கிறது. சலன புத்தியினால் தங்களது கடமைகளையும், மண்ணுலகப் பேறுகளையும் தவற விட்டு விடுவார்கள் என நமது ஞானியர்கள் கூறினார்கள். ஆனால் இயற்கையின் சீற்றத்திற்கு யார்தான் பெறுப்பை ஏற்க முடியும்? நமது சுவாமியின் தகப்பனார் திரு APM. சாமியும், தோட்டத்துப் பருவகாரர் ஆறுமுகம் ஆகிய இருவரும், வெள்ளம் நெற்பயிர்களை அடித்துச்சென்று விட்டபிறகு சேறு படிந்த வயல் வரப்பின் மீது அமர்ந்து கொண்டிருந்தனர். வருமானம் வெள்ளத்தில் போன கவலையில் முதலாளியும், பாடுபட்ட உழைப்பின் வருமானம் கிடைக் வேண்டும் என்கின்ற கவலையில் தொழிலாளியும், கட்டிய வேஷ்டியில் சகதி படிந்துள்ளது அறியாமல் அமர்ந்திருந்தனர்.

ஆழியாறு ஆத்துப் பொள்ளாச்சி கிராமத்தின் அருகே வரும் பொழுது அரை வட்டவடிவில் செல்கிறது. கிராமத்தின் ஆற்றின் கரைகள் இயற்கையான பெரும் பாறைகளால் அமைந்து நல்ல பாதுகாப்பு அரணாக விளங்குகிறது. பெரும் வெள்ளம் இங்கு பலமாக வரும் போது, மேற்கு திசையில் அரண்போல் விளங்கும் பெரிய பாறைகள் மீது வெகு வேகமாக மோதிக் பிரளயம் போல் பொங்கும். அது அப்படியே கிழக்குப் கரையின் மீது மிகவும் வேகமாக மோதும். ஆற்றின் போக்கு தென்திசையில்
சரிவாக அங்கே இயங்குவதால், கிழக்குக் கரையில் இருக்கும் திரு APM சாமி அவர்களின் விவசாய பூமியினுள் வெள்ளம் நுழைந்து விடும். அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் அனைத்தையும் வெள்ளம் கொண்டு போனது. போதாது என்று வரப்புகளில் இருந்த தென்னை மரங்களையும் சேர்த்துக் கொண்டு போனது. நமது சுவாமியின் தகப்பனார் திரு APM சாமி அவர்கள் இரு வேறு எண்ண நிலைகளைக் கொண்டவராக இருந்தார். “இந்தக் காரியம் நடந்ததற்குத் தனது மகன் பிறந்த பொல்லாத நேரம் தான். ஒரு சாமியாரை மகனாக அடைந்தேனே. எல்லாம் எனது தலைவிதி. உடனே சென்று அவனை வீட்டை விட்டுத் துரத்த வேண்டும் “என்று எண்ணிக் கோபம் கொண்டார். பிறகு, “அவன் தான் என்ன செய்வான்? யாருமற்ற அனாதையைப் போல் சுதந்திரம் அற்றவனாக அவனை வைத்திருக்கிறோம். சுவாமி சுவாமி என்று ஏன்தான் இந்த ஜனங்கள் அவனைக் கொண்டாடு கின்றார்களோ தெரியவில்லை? ஒட்டு மொத்த கிராம மக்களுக்கு கிறுக்குத்தனம் வந்ததற்கும் அவன் தான் காரணமாயிருக்கும். அவனை என்ன சேதி என்று கேட்காமல் விடக்கூடாது. ஏன் இப்படிச் செய்தால் என்ன? நீ தான் சாமியாச்சே, இதற்கொரு
வழி சொல்லமாட்டியா? என்று கேட்போம்” எனக் கருவிக் கொண்டார்.

அறுவடை பாதிப்பைப் பற்றி வீட்டில் அவர் அதிகமாகப் பேசிக் கொள்ளவில்லை. அவர் நமது சுவாமியை அருகே அழைத்தார். குளிர்வாகப் பேச ஆரம்பித்தார். “ஏம்பா சாமி” என சப்தமாகக் அழைக்கும் போது வீட்டு மாப்பிள்ளைகள் பேசப்போவதை அக்கரையுடன் கவனிக்க ஆரம்பித்தனர். ” சாமி வருஷா வருஷம் ஆற்றில் வெள்ளம் வரும் போது விவசாயம் பாதிப்பு அடைகிறது. அதனைத் தடுக்க உனது சாமிகிட்டக் கேட்டு ஏதாவது வழி சொல்ல முடியுமா? உனக்கும் அதில் பாகம் கிடைக்குமல்லவா? உனக்கும் இதில் அக்கரை வேண்டுமல்லவா?” என்றார்.
உள்ளே கேலியாகச் சிரிக்கும் சப்தம் கேட்டுக் கொண்டு இருந்தது. நமது சுவாமி அவர்களுக்கு இதையெல்லாம் கேட்டுக் கேட்டுப் பழகி விட்டது. மெளனமாகத் தனது தகப்பனார் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார்.
பிறகு, “ஐயனே, என்னை மகனே என்று அழைக்காமல் சுவாமி
என்று அழைத்தது ஏன்? எனக்கு எனது குருநாதர் இட்ட கட்டளைப்படி, என்னுடைய செயல்களை அறிவின் ஞானத்தால் செய்து வருகின்றேன். அதில் இருந்து விடுபடவும் விருப்பம் கிடையாது. கடவுளின் ஆணையால் இயற்கையின் சக்தி எல்லா உயிர்களையும் வினைச் செயல் புரியச் செய்கிறது. உங்களது கேள்விக்கும் விடை கிடைக்கும். இதோ கூறுகிறேன்” என்ற சுவாமி பாடலாகக் கூறினார்.

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

— ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M. மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button