அக்கரையுடன் கூடிய நம்பிக்கை, செயல்பாடு.

201

Get real time updates directly on you device, subscribe now.

ஓம் ஸ்ரீ ஈஸ்வர மஹா ஜோதியே சரணம்!

31•08•2017,
புதன்கிழமை,
குரு ஈஸ்வராலயம்,
பொள்ளாச்சி.

(427) மனிதனே புனிதன் —
அக்கரையுடன் கூடிய நம்பிக்கை, செயல்பாடு.
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
சுவாமியின் தகப்பனார் கூறிய உபதேசம் அவரைத் தடை செய்து கிராமத்தில் இருத்திக் கொள்வதற்காகக் கூறப்பட்ட தாகும். நமது சுவாமியின் செயலில் குறைபாடு உள்ளது என்பதைப் பதிவு செய்ய முயன்றார். நல்ல விஷயமாக அது இருந்ததால் சுவாமி ஏற்றுக் கொண்டார். நன்றி கூறினார். சற்குருநாதர் உத்தரவோ பவானி செல்ல வேண்டும் . நல்ல லட்சியத்துடன் இருக்க வேண்டும். லட்சியத்தின் மீது மிகுந்த நம்பிக்கை கொள்ள வேண்டும். லட்சிய நம்பிக்கையைச் செயல்படுத்த முயலவேண்டும். உயர்ந்த லட்சியத்தை அடைவதற்கு எல்லா முயற்சிகளையும் செய்ய மிகுந்த அக்கறை கொள்ள வேண்டும். இந்த முக்கியமான போற்றுதற்குரிய விஷயமாகிய அக்கறையை சிரத்தை என்று ரிஷிகள் குறிப்பிடுகின்றார்கள். இது இறைவனுடைய சிரத்தில் என்றுமே இருக்கின்றதாம். இதற்கு ஈர்ப்புடன் கூடிய தவமும், இதயத்தில் ஞான தாகமும் உள்ளவர்களால் அடையப்படுகிறதாம். எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதற்கு சிறப்பான அக்கறை ஏற்பட வேண்டும். இதனை நமது சுவாமி நன்கு உணர அவரது உள்ளத்தில் சற்குரு நாதர் பதிய வைத்தார். ஞானநிலைக்குச் சென்றவர்கள் சிரத்தையற்றுத் தவறுகள் புரிந்து விட்டாலோ, அவர்கள் பிரபஞ்சத்தில் சந்தோஷம் அற்ற உலகங்களை அடைந்து விடுவார்கள் என்பது ரிஷிகள் வாக்கு. அது என்றுமே பொய்ப்பதில்லை. எனவே உலக இயல்புக்கு மாறாத குணங்களே அநேக வித்தைகளைக் கற்றுத் தருவதற்கான வழிவகைகளை ஏற்படுத்தும் ஆற்றல்களாக இறையருளால் வெளிப்பட்டன. அதில ஒன்று தான் தனது வாழ்க்கையில் உள்ளது உள்ளபடி தனது மதிப்பை, தான் இருக்கும் இருப்பை அறிந்து வைத்திருத்தலாகும். சில விஷயங்களில் தோல்வியை அடைய நேரிடலாம், சிலவற்றில் வெற்றியை அடைந்து விடக் கூடும். பொதுவாகத் தான் தனது வாழ்வில் தன்னுடைய குறை, நிறைகளைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

மற்றுமொன்று சித்தர்கள், முனிவர்கள், மகான்கள் தங்கள் வாழ்க்கையில் சிறந்த வழிகாட்டிகளாக விளங்கி வந்துள்ளார்கள். அவர்கள் பெற்ற அனுபவங்கள் நமக்குப் புரிந்து கொள்ள உதவுவதோடு, நமது செயலைக் சுலபமாக வெற்றிபெறச் செய்யும். மூன்றாவதாக நாம் பிறருக்குத் தந்த வாக்கை எப்படியும் காப்பாற்றியாக வேண்டும். அதற்கான செயல்களில் ஈடுபடும் போது வருத்தமோ, கோபமோ கொள்ளக் கூடாது. மிகவும் பொறுமையுடன் காரியத்தில் ஈடுபடவேண்டும். அடுத்ததாக நமது வீடு தேடி வரும் அதிதிகளுக்கு நல்ல வார்த்தை சொல்லி அன்புடன் உபசரிக்க வேண்டும். பொதுவாக நமது வாழ்வில் நம்பிக்கையுடன் கூடிய செயலில் மிகுந்த அக்கறை வேண்டும். அப்படிப்பட்டவர்களே மனப்பக்குவம் உள்ளவர்கள். இறைவனது கருணைக்கு விவேகிகளாகிய அவர்கள் பாத்திரமாவார்கள். மனப்பக்குவம் அற்றவர்கள் உலகிலுள்ள சுகபோகங்களை விரும்பி நாடி இறுதியில் அழிவெய்தி விடுகின்றனர். அழிவற்ற பராபரமாகிய இறைவனை அவர்கள் ஒருபோதும் அறியாமல், அறியாமை இருளில் சிக்குண்டு சந்தோஷமற்ற இடங்களில் வாழும் நிலையை எய்துகின்றனர்.

நமது சுவாமி பவானி புறப்பட்டுச் செல்லும் காலம் வரை மனம் பக்குவம் பெற்றிட அநேக உபதேசக் கருத்துக்களை சற்குரு நாதர் தியான காலத்தில் அனுப்பிக் கொண்டே இருந்தார்.
“மகனே நாகராஜா பவானியில் உனக்கு எவ்வளவோ நிகழ்ச்சிகள் நிகழ உள்ளன. தவம் செய்யப் போகும் நீ உனது உடல் ரீதியாக எத்தனையோ அனுபவங்களைப் பெறப் போகிறாய். அதனை முன் கூட்டியே உனக்குச் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. உனது அனுபவங்களில் எத்தனை, எத்தனையோ விஷயங்கள் அதனைத்தும் மனதினைக் கடந்து சென்று கொண்டே இருப்பதை அறிவாய். மனதுடன் அனுபவ விஷயங்கள் அனைத்தையும் இணைத்துக் கொண்டால், விருப்பு – வெறுப்பு, சுகம் – துக்கம் ஏற்பட்டு விடுவதால் இவை எவற்றிலும் பங்கேற்காமல் இருந்தால் மட்டுமே நம்முள் இருக்கும் புனிதமான ஆன்மாவுடன் நம்மை ஒன்றுபடுத்திக் கொண்டிட முயற்சி செய்ய வேண்டும். அதற்கு உனது நிகழ் காலத்தைப் பயன்படுத்தி தவவாழ்வில் ஈடுபடுவாய். அதுவே உனக்குள்ள கடமை விதி என்பதை நன்றாக உணர்ந்து கொண்டு செயல்படுவாய். பூரண நல்ஆசிகள் ” என்றார். பண்டைய முனிவர்கள் எந்த விஷயத்தைப் பற்றி வலியுறுத்தி வந்தார்களோ, அதனையே சற்குரு நாதரும் எடுத்துரைத்தார். எந்த ஆசானும் உபதேசசாரத்தை வீண் செய்வது இல்லை. சீடனின் தகுதியைப் பற்றி நிர்ணயித்தே தேவையான ஆலோசனைகளைக் கூறுவார். அதனைப் பற்றிக் கொண்டு முன்னேறிச் செல்லும் செயலில் உள்ள நம்பிக்கையில் தான் வெற்றி வாய்ப்பு உண்டாகின்றது.
அதனை குரு கடாட்சம் என்றும் கூறலாம். பணிவும், பக்தியும், நற்செயலும் தான் சீடனின் லட்சணம். அவனே லட்சியவாதி. அனைத்திற்கும் ஓர் ஆதார சக்தி பிரபஞ்சத்தில் இயக்கிக் கொண்டே உள்ளது. அது…

(மனிதனே புனிதன் வரலாறு இன்னும் தொடர்ந்து வரும்)

நன்றி! வணக்கம்!

—- ஸ்ரீ ஈஸ்வர குமாரரின் தொண்டன்!
மதுரை M.மேகநாதன்.


Copyright Warning:
* All images and materials are copyright protected and are the property of Guru Eswaralayam Charitable Trust. Please contact us at admin@gurueswaralayam.com for permission to use our copyrighted materials.
* Unauthorized use and/or duplication of these images and materials without written permission from this blog’s authors and owners is prohibited. Excerpts and links may be used, provided that credit is given to Guru Eswaralayam Charitable Trust, with appropriate and specific direction to the original content.

Get real time updates directly on you device, subscribe now.

Call Now Button